புதன், 25 ஜனவரி, 2012

ஹிந்தியில் களமிறங்குகிறார் தனுஷ்


கொலைவெறி பாடல் வெற்றியடைந்ததையடுத்து ஹிந்தி திரையுலகில் நடிகர் தனுஷ் கதாநாயகனாக நடிக்கவுள்ளார்.
தமிழ் தவிர பிற மொழியிகளிலும், வெளிநாட்டு ஆல்பங்களிலும் பாடும் வாய்ப்பு, மற்றும் பிரதமர் விருந்தில் பங்கேற்பு என்று தனுஷின் தகுதி உயர்ந்து வரும் வேளையில் தற்போது ஹிந்தி திரைப்படத்திலும் நடிக்க அவருக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது.
ஹிந்தியில் மாதவன்-கங்கனா ரனாவத்தை வைத்து தானு வெட்ஸ் மானு திரைப்படத்தை இயக்கிய பிரபல இயக்குனர் ஆனந்த் எல்.ராய், தான் அடுத்து இயக்கவிருக்கும் புதிய படத்தில் தனுஷை கதாநாயகனாக நடிக்க தெரிவு செய்துள்ளார்.
இப்படத்திற்கு ராஞ்சனா என்று பெயரிட்டுள்ளனர். இதுகுறித்து ஆனந்த் ராய் கூறுகையில், என்னுடைய புதிய படத்திற்கு கடந்த ஆறு மாதத்திற்கு மேலாகவே கதாநாயகனைத் தேடி வந்தேன்.
இப்படத்தில் நடிக்கும் கதாநாயகன் மிகவும் எளிமையாகவும், என்னுடைய கதைக்கு ஏற்றவாறும் இருக்க வேண்டும் என்று எண்ணினேன். அதன்படி ஆடுகளம் திரைப்படத்தில் தனுஷின் நடிப்பை பார்த்து தான் அவரை தெரிவு செய்துள்ளேன் என்று கூறியுள்ளார்.
இது பற்றி தனுஷ் கூறுகையில், ஆனந்த் ராய் கூறிய கதை என்னை மிகவும் கவர்ந்துள்ளதால் இப்படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டேன்.
ஹிந்தி திரைப்படத்தில் நடிப்பது தயக்கமாகத்தான் இருக்கிறது. அதற்கு காரணம் மொழியல்ல அங்குள்ள கலாசாரம் தான். அதற்‌கேற்றவாறு என்னை எப்படி தயார்படுத்தி கொள்வது என்பது தான் என்னுடைய தயக்கம்.
சமீபத்தில் இயக்குனர் ஆனந்த்துடன் பனாராஸ் சென்றேன். அங்குள்ள மொழி கலாசாரம் எனக்கு தெரியாமல் இருந்தாலும் அதன் அழகும், தெய்வீக தன்மையும் என்னை மிகவும் கவர்ந்துவிட்டது.
ராஞ்சனா திரைப்படத்தில் நடிப்பதற்காக ஒர் ஆசிரியர் மூலம் ஹிந்தி கற்று வருகிறேன், விரைவில் ஹிந்தியில் பேச கற்றுக்கொள்வேன் என்று கூறியுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக