புதன், 18 ஏப்ரல், 2012

அரசாங்கத்திடம் புலம்பும் உதயநிதி ஸ்டாலின்: அறிக்கை வெளியீடு


7ஆம் அறிவு திரைப்படத்துக்கு அரசு அறிவித்த புதிய அரசாணை(2) நாள் 3/01/12 படி வரி விலக்கு கோரி 10/01/12 அன்று விண்ணப்பிக்கப்பட்டது.
இரண்டு மாத தாமதத்துக்கு பின்னர் அணைத்து திரையரங்குளிலும் படம் ஓடி முடியும் வரை காத்திருந்து இறுதியாக ஒரு திரையரங்கில் கூட ஓடவி்ல்லை என்பதை உறுதிசெய்து கொண்டு 05/03/12 அன்று வரிவிலக்கு வழங்கி அரசு உத்தரவிட்டது.
இந்த உத்தரவினால் ஒரு பயனும் அடைந்துவிடக்கூடாது என்பதில் அரசு கவனமாக இருந்தது. 7ஆம் அறிவு படத்துக்கு வரி விலக்கு கோரி விண்ணப்பித்த நாளுக்கும், வரிவிலக்கு வழங்கிய நாளுக்கும் இடைப்பட்ட நாட்களில் கீழ்கண்ட படங்களுக்கு வரிவிலக்கு வழங்கி அரசு உத்தரவிட்டுள்ளது.
1.கொண்டான் கொடுத்தான்
2.வேலாயுதம்
3.மெரினா
4.காதல் பிசாசே
5.காதலர் கதை
6.நண்பன்
7.வழிவிடு கண்ணே வழிவிடு
8.விளையாடவா
9.விருதுநகர் சந்திப்பு
10.வேட்டை
11.நாங்க
இதன் மூலம் வேண்டுமென்றே எங்கள் 7 ஆம் அறிவு திரைப்படத்துக்கு மட்டும் காலதாமதமாக வரிவிலக்கு அளித்துள்ளது உறுதியாகிறது. 19/03/12 ஒரு கல் ஒரு கண்ணாடி திரைப்படத்திற்கு தணிக்கை சான்றிதழ் கிடைத்தது.
21/03/12 கேளிக்கை வரி விலக்கு கோரி மனுத்தாக்கல் செய்யப்பட்டது. 22/03/12 ல் ஒரு குறிப்பிட்ட படத்துக்கு தணிக்கை சான்றிதழ் கிடைத்தது.
ஒரு படத்துக்கு வரி விலக்கு கோரி விண்ணப்பிக்கும் போது தணிக்கை சான்றிதழ் இணைப்பு அவசியம் என்பதால் அந்த குறிப்பிட்ட படத்துக்கு 22/03/12 அல்லது அதற்கு பின்னர் தான் வரிவிலக்கு கோரி விண்ணப்பித்திருக்க முடியும்.
30/03/12 கேளிக்கை வரி விலக்கு அந்த குறிப்பிட்ட படத்துக்கு அளிக்கப்பட்டது (அதாவது 7 நாட்களில் வரிவிலக்கு அளிக்கப்பட்டது. “ஒரு கல் ஒரு கண்ணாடி” திரைப்படத்திற்கு விண்ணப்பம் செய்து சுமார் ஒரு மாதம் ஆகியும் வரி விலக்கு அளிக்க திரைப்படம் பார்ப்பதற்கு நாள் குறிக்கப்படவில்லை. ஆகவே 12/04/12 அன்று சென்னை உயர்நீதி மன்றத்தை நாடிய போது சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின் படி 16/04/12 அன்று திரைப்படம் பார்க்க நாள் குறிக்கப்பட்டது.
16/04/12 அன்று “ஒரு கல் ஒரு கண்ணாடி” திரைப்படத்தை பார்த்த அரசு அமைத்த 7 பேர் கொண்ட குழுவின் அனைத்து உறுப்பினர்களும் இத்திரைப்படம் வரி விலக்கு அளிப்பதற்கு தகுதியானது அல்ல என பரிந்துரை செய்துள்ளதாகவும் அதனால் ”ஒரு கல் ஒரு கண்ணாடி” திரைப்படம் தமிழ்நாடு கேளிக்கைகள் வரிச்சட்டம் 1939ன்கீழ் கேளிக்கை வரியில் இருந்து விலக்க அளிக்க தகுதியானது அல்ல என முடிவு செய்து அரசாணை வெளியிட்டுள்ளதாகவும் உயர்நீதி மன்றத்தில் அரசின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசாணை(2): நாள் 30/01/12 படி வரி விலக்கு அளிப்பதற்கு நான்கு வழி முறைகள் கொடுக்கப்பட்டன.
தமிழ் பெயர் தவிர்த்து
1. ”U” சான்றிதழ்
2. படத்தின் கதைக்கு தமிழ் மொழி மற்றும் பண்பாட்டு வளர்ச்சிக்கு உகந்ததாக இருக்க வேண்டும்
3. திரைப்படத்தின் தேவையை கருதி பிற மொழிகளை பயன் படுத்தும் காட்சிகளை தவிர பெருமளவில் திரைப்படத்தின் வசனங்கள் தமிழ் மொழியில் இருத்தல் வேண்டும்
4. திரைப்படத்தில் வன்முறை மற்றும் ஆபாசங்கள் அதிக அளவில் இடம் பெருமேயானால் அத்திரைப்படம் வரிவிலக்கு பெறுவதற்கான தகுதியை இழக்கும்.
இதில் எங்கள் திரைப்படத்திற்கு எந்த குறைபாடு உள்ளதென்று எந்த உறுப்பினர் கூறியுள்ளார் என்பது தெரிவிக்கப்படவில்லை. இந்த நேரத்தில் நாங்கள் கூறுவது எந்த திரைப்படத்தையோ, சக கலைஞர்களையோ, சக தயாரிப்பாளர்களையோ புண்படுத்த அல்ல. சமீபத்தில் கேளிக்கை வரி கொடுக்கப்பட்ட ஒரு திரைப்படத்தில் ஆங்கிலம் கலந்த தமிழ் பாடல் உள்ளது. கேளிக்கை விடுதியல் வைத்து திருமணம் நடப்பது போல் காட்சி வருகிறது.
இது போன்ற திரைப்படத்திற்கு வரி விலக்கு அளித்து விட்டு எங்கள் படத்திற்கு வரி விலக்கு அளிக்க மறுப்பது எந்த வகையில் நியாயம்?. இந்த காட்சிகள் தமிழ் கலாசாரத்தையும், மொழியையும் வளர்ப்பதாக எப்படி கருத முடியும்?.
வன்முறை அதிகமாக உள்ள மற்றும் ஆங்கில கலப்பு அதிகமாக உள்ள படத்துக்கு வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. அனைத்து மக்களையும் கவர்ந்த ”ஒரு கல் ஒரு கண்ணாடி” படத்துக்கு வரி விலக்கு அளிக்க மறுப்பது என்ன நியாயம்?.
எனது தந்தை அரசியலில் இருப்பதால் அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக எங்கள் நிறுவனம் தயாரிக்கும் திரைப்படங்களை பாதிக்கும் வகையில் அரசு திட்டமிட்டு பழிவாங்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளது. இதனால் எனக்கு மட்டும் பாதிப்பு இல்லை.
என்னை நம்பி இத்திரைப்படத்தை வாங்கிய விநியோகஸ்தர்கள், திரையரங்கு உரிமையாளர்கள் அனைவரும் பாதிக்கப்பட்டுள்ளனர். எங்களுக்கு நியாயமாக கிடைக்க வேண்டிய உரிமைகள் மறுக்கப்படுவதால் அனைத்து ஊடக நண்பர்களாகிய முறையிடுகிறேன்.
 

தனது மகளுக்காக சொகுசு கார் வாங்கிய அபிஷேக் பச்சன்


தனது மகளுக்காக பாலிவுட் நடிகர் அபிஷேக் பச்சன் ஆடி-8 ரக சொகுசு கார் ஒன்றை சமீபத்தில் வாங்கியுள்ளார்.
பாலிவுட் ஜோடி அபிஷேக் பச்சன்-ஐஸ்வர்யா ராயுக்கு கடந்த 2011ம் ஆண்டு அழகான பெண் குழந்தை பிறந்தது.
இக்குழந்தைக்கு ஆராத்யா என்று பெயர் வைத்துள்ளனர்.
இந்நிலையில் அபிஷேக் பச்சன், தன் மகள் ஆராத்யா வெளியில் செல்வதற்காக ஆடி-8 ரக சொகுசு கார் ஒன்றை வாங்கியுள்ளார்.
இக்கார் வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டு மும்பை வந்தது.
சொகுசு கப்பல் என்று கூறும் அளவிற்கு இந்த காரில் ஆடம்பர வசதிகள் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

த்ரிஷா- நயன்தாரா பனிப்போர்


தமிழ், தெலுங்கு சினிமாவில் நயன்தாரா - த்ரிஷா இடையிலான போட்டா போட்டி ரொம்பவே பிரசித்தம்.
ஒருவர் வாய்ப்பை மற்றவர் தட்டிப் பறிப்பதில் இருவருமே கொஞ்சமும் சளைத்தவர்கள் அல்ல.
கடந்த 10 ஆண்டுகளாக இருக்கும் இந்தப் போட்டி இப்போதும் தொடர்வது குறிப்பிடத்தக்கது.
சம்பள விஷயத்தில் நயன்தாரா கொஞ்சம் முன்னே இருக்கிறார். அவரை விட ரூ 20 லட்சம் குறைவாக வாங்குகிறார் த்ரிஷா.
நயன்தாரா நடிப்பதாக பேசிக் கொண்டிருந்த படங்கள் த்ரிஷாவுக்கும், த்ரிஷா நடிப்பதாக அறிவிக்கப்பட்ட படங்கள் நயன்தாராவுக்கும் போனது நினைவிருக்கலாம்.
குருவி படத்தில் விஜய் ஜோடியாக நயன்தாரா ஒப்பந்தம் செய்யப்பட்டார். ஆனால் கடைசி நேரத்தில் அவரை மாற்றி விட்டு த்ரிஷாவை ஒப்பந்தம் செய்தனர்.
இதுபோல் சத்யம் படத்தில் விஷால் ஜோடியாக நடிக்க த்ரிஷாவை முடிவு செய்தனர். ஆனால் கடைசி நேரம் நயன்தாரா அப்படத்தை தட்டி பறித்துக் கொண்டார்.
படங்களில் மட்டுமல்ல, விளம்பர வாய்ப்புகளிலும் இப்படித்தான்.
சென்னையில் உள்ள பிரபல ஜவுளிக் கடையொன்றில் சேலை விளம்பரத்துக்கு நயன்தாரா ஒப்பந்தம் செய்யப்பட்டார். அதே கடையில் த்ரிஷா விளம்பர தூதுவராக உள்ளார்.
இருவருக்கும் இடையே யாருக்கு அதிக விளம்பர போர்டுகள் வைப்பது என்பதில் மோதல் நடக்கிறதாம்.
இதோடு மோதல் முடிவடையாமல் அவரவர் பர்சனல் சமாச்சாரங்களில் கூட இந்தப் போட்டி வந்துவிட்டதாம்.
சமீபத்தில் நயன்தாராவின் முன்னாள் காதலர் ஆகிவிட்ட பிரபுதேவாவுடன் நெருக்கமாக இருப்பது போன்ற படமொன்றை தனது டுவிட்டரில் திரிஷா வெளியிட்டார்.
இதற்கு பதில் தரும் விதத்தில் ஹைதராபாத்தில் நடந்த விழா ஒன்றில் த்ரிஷாவின் நெருங்கிய நண்பரான நடிகர் டகுபதி ராணாவுடன் நெருக்கமாக அமர்ந்து சிரித்து சிரித்து பேச, அதை அப்படியே ஆந்திர சேனல்கள் லைவாகக் காட்ட, த்ரிஷா விட்ட உஷ்ண மூச்சில் ஏசி அறையே சூடாகிவிட்டதாம்.
இதற்கு என்ன பதில் தருவது என்று த்ரிஷா யோசித்துக் கொண்டிருக்கிறாராம்.

தமிழ் படத்தில் கேட்டி பெர்ரி நடனம்


கலிபோர்னியாவை சேர்ந்த பொப் பாடகி, டான்ஸர் கேட்டி பெர்ரி தமிழ் படத்தில் நடனம் ஆடுகிறார்.
இவரிடம் கருப்பம்பட்டி தமிழ் படத்தில் நடனம் ஆட கால்ஷீட் கேட்டுள்ளனர். இது பற்றி பட இயக்குனர் பிரபு ராஜ சோழன் கூறியதாவது: பிரான்ஸ் நாட்டில் பாரிஸ் நகரில் வசிக்கும் அஜ்மல் தமிழகத்தில் தனது தந்தை வாழ்ந்த ஊரை தேடி வருகிறார்.
அவருடன் கதாநாயகி அபர்ணா பாஜ்பாய்க்கு காதல் மலர்கிறது. ஊரை கண்டுபிடித்தாரா? அபர்ணாவுடன் காதல் என்ன ஆகிறது என்பதே கதை. இதன் படப்பிடிப்பு பாரிஸ் நகரில் 30 நாட்கள் நடந்தது. இதையடுத்து சென்னை, பழநியில் படப்பிடிப்பு நடந்தது.
தந்தை, மகன் என இருவேடத்தில் அஜ்மல் நடிக்கிறார். இப்படத்திற்காக பாலிவுட் இசை அமைப்பாளர் பப்பி லஹரி ஒரு பாடல் பாடி உள்ளார்.
இதன் படப்பிடிப்பு டிஸ்கோ பாணி அரங்கில் நடக்க உள்ளது. இதில் நடனம் ஆடுவதற்காக பிரபல மேற்கத்திய இசை பாடகி கேட்டி பெர்ரியிடம் பேசப்பட்டுள்ளது.
கால்ஷீட் இடைவெளியை பொருத்து நடிப்பதாக கூறி இருக்கிறார். இவர் ஐபிஎல் தொடக்க விழாவில் சமீபத்தில் நடனம் ஆடி இருந்தார். அஜ்மலும் இவருடன் டான்ஸ் ஆடுகிறார் என்று தெரிவித்தார்.

பில்லா-2 ல் நடனமாடிய யுவன் சங்கர் ராஜா


தான் இசையமைத்துள்ள பில்லா-2 படத்தில் யுவன் சங்கர் ராஜா நடனமாடியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
தல அஜீத்குமாரின் பில்லா-2 படத்தின் இறுதிக்கட்ட பணிகள் மிக வேகமாக நடைபெற்று வருகிறது.
டப்பிங், ரீ ரிக்கார்டிங், கிராபிக்ஸ் உள்ளிட்ட பணிகள் தற்போது நடந்து வருகிறது.
சமீபத்தில் வெளியான பில்லா-2 முன்னோட்டக்காட்சி ஒட்டுமொத்த ரசிகர்களையும் கவர்ந்துள்ளது.
இந்நிலையில் இப்படத்திற்கு இசையமைத்ததோடு மட்டுமல்லாமல் ஒரு பாடலுக்கு யுவன் சங்கர் ராஜா நடனமாடியிருக்கிறார்.
இப்பாடல் காட்சி, ரசிகர்களை கவரும் விதத்தில் படக்குழுவினர் படமாக்கியுள்ளனர்.
பில்லா-2ல் அஜித்திற்கு ஜோடியாக ஓமணக்குட்டன் நடித்துள்ளார். சக்ரி டோலட்டி இயக்கி வருகிறார்.

தோழர்களுக்கு விருந்து வைத்த ஜெயம் ரவி


தன்னுடைய திரையுலக தோழர்களுக்கு நாயகன் ஜெயம் ரவி, வீட்டில் விருந்து வைத்து அசத்தியுள்ளார்.
இவ்விருந்தில் ஆர்யா, ஜீவா, சிபிராஜ், இயக்குனர் வெங்கட் பிரபு ஆகியோர் கலந்து கொண்டர்.
ரவியும், மனைவி ஆர்த்தியும் நண்பர்கள் அனைவருக்கும் விருந்து உணவுகளை பரிமாறினர்.
இதுகுறித்து நாயகன் சிபிராஜ், என் மனைவியுடன் விருந்திற்கு சென்றிருந்தேன். தொழில் கஷ்டங்களை மறந்து விட்டு அனைவரும் ஒன்றாகக் கூடி விருந்து சாப்பிட்டது மிக்க மகிழ்ச்சியான தருணமாக அமைந்தது என்றார்.
ஜெயம் ரவி தற்போது இயக்குனர் அமீரின் ஆதிபகவன் படத்திலும் பூலோகம் என்ற படத்திலும் நடித்து வருகிறார்.
விரைவில் ரவியின் ஆதிபகவன் திரைக்கு வரவுள்ளது குறிப்பிடத்தக்கது.

3 படத்திற்கும் எனக்கும் எந்த சம்மந்தமும் இல்லை: ரஜினிகாந்த்


ஜஸ்வரியா தனுஷ் இயக்கிய 3 திரைப்படம் தெலுங்கில் படு தோல்வியை சந்தித்திருந்தது. 
இந்த இழப்பை பொருளாதார ரீதியாக ரஜினி சரி செய்வார் என்ற தகவல் வெளியானது.
ஆனால் இது வெரும் வதந்தி என்பதை நிரூபிக்கும் வகையில் ரஜினி தனது கைப்பட ஒரு கடிதம் எழுதி வெளியிட்டுள்ளார்.
எனது மகள் ஜஸ்வரியா இயக்கி தனுஷ் ஸ்ருதி நடித்து சமீபத்தில் வெளியான 3 திரைப்படத்தில் வியாபார ரீதியாக என்னை சம்மந்தப்படுத்தி ஒரு பொய்யான செய்தி வெளியாகியுள்ளது.
அந்த படத்திற்கும் எனக்கும் வியாபார ரீதியாக எந்தவித சம்மந்தமும் இல்லை. ஆகவே திரைப்பட வினியோகஸ்தர்கள் யாரும் என்னை சம்மந்தப்படுத்தி வெளிவரும் பொய்யான செய்திகளை நம்ப வேண்டாம் என்று தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.

மகிழ்ச்சியில் திக்கு முக்காடியுள்ள ஒரு கல் ஒரு கண்ணாடி திரைப்படக் குழுவினர்


கடந்த வெள்ளிக்கிழமை அன்று 'ஒரு கல் ஒரு கண்ணாடி' திரைப்படம் வெளியானது.
இந்தத் திரைப்படம் தயாரிப்பாளர்களின் எதிர்பார்ப்பையும் மீறி ஓடிக்கொண்டிருப்பதில் உதயநிதி வட்டாரம் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளது.
அஜித், விஜய், சூர்யா படங்களுக்கு இருக்கும் ஓபனிங் இந்தப் படத்திற்கு இருக்கும் என எதிர்பார்த்துக் கொண்டிருந்தனர்.
ஆனால் அதையும் தாண்டி ரஜினி படத்திற்கு இருக்கும் ஓபனிங் இருப்பதை கண்டு 'ஓகே ஓகே' யூனிட்டே சந்தோஷத்தில் திக்குமுக்காடிப் போயிருக்கிறது.
அந்த அளவுக்கு இந்தப் படம் அனைவரையும் கவர்ந்திருக்கிறது. ஏ, பி, சி ஆகிய அனைத்து சென்டர்களையும் இப்படம் தன்வசம் இழுத்துள்ளது.
போட்ட பணம் வந்தாலே போதும் என்று இருந்தவர்களுக்கு இந்தத் திரைப்படம் பன்மடங்கு லாபத்தை கொடுக்கும் என்பது தெரிய வந்ததால் மகிழ்ச்சியில் திக்குமுக்காடியுள்ளனர்.

திங்கள், 9 ஏப்ரல், 2012

மீராவுடன் கிருஷ்ணா


மனைவிகளின் தகாத உறவுகள், கணவர்களின் சந்தேக புத்தியை மையமாகக் கொண்டு வந்திருக்கும் இன்னொரு படம் மீராவுடன் கிருஷ்ணா.
கொஞ்சம் நாடகத்தனம், கொஞ்சம் அமெச்சூர்த்தனம் இருந்தாலும் ஒரு முறை பார்க்கலாம் ரக படங்களில் இதுவும் ஒன்று.
தாய் சொல்லை தட்டாத பிள்ளையான கிருஷ்ணா, அம்மாவின் வற்புறுத்தலால் மீராவை திருமணம் செய்கிறார்.
மீரா ஒரு டாக்டர். கிருஷ்ணா சுமாராக இருந்தாலும், அநாதைப் பிணங்களை தானே முன்வந்து பொறுப்பேற்று அடக்கம் செய்யும் அவரது நல்ல மனதைப் பார்த்து திருமணம் செய்து கொள்கிறார்.
சந்தோஷமாக தாம்பத்யம் தொடங்கும் நேரத்தில், கிருஷ்ணாவுக்கு ஒரு மர்ம ஆசாமியிடமிருந்து தொலைபேசி அழைப்பு வருகிறது. மீராவைப் பற்றி அந்த நபர் தவறாகச் சொல்ல சந்தேகப் பேய் பிடித்துக் கொள்கிறது கிருஷ்ணாவை.
அது பெரிய சண்டையாக மாறுகிறது. ஆனால் அம்மா மீதுள்ள அதீத அன்பால், எதையும் வெளியில் சொல்லாமல் மூடி மறைக்கிறான் கிருஷ்ணா.
அந்த நேரம் பார்த்து மீரா கர்ப்பமாக அந்தக் குழந்தைக்கு தந்தை யார் என்று மனைவியை நேரடியாகவே கேட்கிறான். சண்டை முற்றுகிறது. குழந்தையை அழிக்கவும் திட்டமிடுகிறான்.
இதனால் வெறுத்துப் போன மீரா, தாய் வீட்டுக்குப் புறப்படுகிறாள். அப்போதுதான் தன் சந்தேகங்களுக்கான காரணங்களைச் சொல்கிறான் கிருஷ்ணா. அந்த ப்ளாஷ்பேக் அழுத்தமானது. இறுதியில் கிருஷ்ணாவின் சந்தேகம் தீர்ந்ததா... என்பதை ஒரு முறை தியேட்டரில் பார்த்துவிடுங்கள்.
சினிமாவில் யாரிடமும் உதவியாளராகக் கூட இல்லாமல், தன் முயற்சியில் தனக்குத் தெரிந்த சினிமாவை எடுத்த கிருஷ்ணாவுக்கு முதலில் வரவேற்புகள். வாழ்த்துகள்.
முதல் காட்சியே வித்தியாசமாகத்தான் ஆரம்பிக்கிறது. ஹீரோ தனக்குத் தானே பேசிக் கொள்ளும் காட்சிகளைப் பார்க்கும்போது, திரும்பவும் சைக்கோ கதையா என்ற கேள்வி எழுந்தாலும், அதை அப்படியே காமெடியாக மாற்றிவிடுவதால் தப்பிக்கிறோம்.
படத்தின் இயக்குநரே ஹீரோவாகவும் நடித்திருக்கிறார். பரவாயில்லை ஆங்காங்கே கொஞ்சம் மிகை நடிப்பு இருந்தாலும், ஒட்டுமொத்தமாக பார்க்கும்போது, இப்போதுள்ள நடிகர்களுக்கு கொஞ்சமும் குறையாத திறமை அவரிடம் இருக்கிறது.
நாயகியாக வரும் ஸ்வேதா இயல்பாக நடிக்க முயற்சித்துள்ளார். குறிப்பாக சந்தேக புத்தியால் பேயாட்டம் போடும் கணவனை அதட்டி, கட்டுப்படுத்தும் காட்சிகளில் நன்றாக நடித்துள்ளார்.
ப்ளாஷ்பேக்கில் வரும் அந்த 'தமிழ் அண்ணன்' (எம்ஆர்ஏ விஜய்) கதை மனதைப் பிசைகிறது. ஒவ்வொரு கிராமத்திலும் இப்படி தமிழ் அண்ணன்கள், அவர்களின் சிஷ்யப் பிள்ளைகள் சகிதம் வலம் வருவதைப் யாரும் பார்த்திருக்க முடியும். அந்த 'க்ளீன் அண்ணன்' கடைசியில் இடுப்பு வேட்டி அவிழ்வதுகூட தெரியாத அளவு மனநிலை பிறழ்ந்து, ஒரு அநாதையாய் செத்துக் கிடக்கும் காட்சி மனதை என்னமோ செய்கிறது.
பிரதான காமெடியன் என்று யாருமில்லா விட்டாலும், அந்தக் குறை தெரியாத அளவு பார்த்துக் கொள்கிறார் ஜிகினா ஜித்தன். நண்பனுக்கு துரோகம் செய்த மனைவியை அம்பலப்படுத்துவதும், அவர்களை பின்னர் சேர்த்து வைப்பதும் இயல்பான காட்சிகள்.
சில காட்சிகளில் ஒருவித தொழில் முறையின்மை தெரிகிறது. முதல்படம் என்ற வகையில் அது புரிந்து கொள்ளக் கூடியதே. திரும்பத் திரும்ப ஒரேமாதிரியான காட்சிகள் வருவது, அந்த மர்மக் குரல் யாரென்று கூட கண்டுபிடிக்க முயற்சிக்காமல், அதை மட்டும் வைத்தே மனைவியை சந்தேகப்படுவது போன்ற குறைகளை சரிசெய்திருக்கலாம்.
அந்த வேலைக்காரி பாத்திரத்தை இன்னும் கொஞ்சம் நாசூக்காக கையாண்டிருக்கலாம். இடைவேளைக்குப் பிறகு பல காட்சிகள் வெகுநேரம் நீள்கின்றன. பார்வையாளர்களை சலிப்படைய வைக்கிறது.
நல்லவேளை படத்தில் இரண்டு பாடல்கள்தான். அவற்றில் சந்தனம் சேறாகுமா.. என்ற ராஜேந்தர் டைப் பாடல் ரசிக்க வைக்கிறது. பின்னணி இசை கூட ஓகேதான்(செந்தில் பிரசாத்).
படத்தின் ஒளிப்பதிவாளர் எம்ஆர்ஏ விஜய். தயாரிப்பாளரும் கூட(தமிழ் அண்ணனாக வருபவரும் இவரே).
குறைகள் இருந்தாலும், எந்தக் காட்சியிலும் நெளிய வைக்காமல் நேர்த்தியாக கதை சொல்லத் தெரிந்திருக்கிறது கிருஷ்ணாவுக்கு. அந்தவகையில், அவரை வரவேற்போம்.
நடிகர்கள்: ஏ கிருஷ்ணா, ஸ்வேதா, ராதா, மனோபாலை, ஜிகினா ஜித்தன், எம்ஆர்ஏ விஜய்.
இசை: கே கே செந்தில் பிரசாத்.
எழுத்து இயக்கம்: ஏ கிருஷ்ணா.
தயாரிப்பு: எம்ஆர்ஏ விஜய்.

சவாலான கதாபாத்திரத்தில் சாதிக்க முடியும்: தன்ஷிகா


கொலிவுட்டில் பேராண்மை, அரவான் படங்கள் பெயர் வாங்கி கொடுத்ததில் தன்ஷிகா மிகுந்த சந்தோஷத்தில் உள்ளார்.
ஆபத்தான காட்சிகளில் துணிந்து நடிக்கத் தயாராக இருக்கும் நடிகைகளில் தற்போது இவர் தான் முன்னணியில் இருக்கிறார்.
தமிழிலேயே பேசி நடிப்பதும், தன்னுடைய உயரமும் தான் எனக்கு ப்ளஸ் பாய்ண்ட் என்கிறார் தன்ஷிகா.
அவர் மேலும் கூறியதாவது, எனக்கு தமிழ் தெரியும் என்பதால் தான் பேராண்மை படத்தில் இயக்குநர் ஜனநாதன் சார் வாய்ப்பு தந்தார்.
மேலும் இப்படத்தில் என்னுடைய குணாதிசயங்களையும், நடிப்பையும் பார்த்து தான் இயக்குநர் வசந்தபாலன் சார் அரவான் படத்தில் வாய்ப்பு கொடுத்தார்.
என்னால் சவாலான கதாபாத்திரங்களில் நடிக்க முடியும் என்பதை இப்படத்தின் மூலம் நிரூபித்துள்ளேன்.
இருப்பினும் மற்ற நடிகைகள் மாதிரி கவர்ச்சியாகவும் என்னால் நடிக்க முடியும். மாஞ்சா வேலு படத்தில் அப்படித்தான் நடித்திருக்கிறேன்.
சென்னையில் வளர்ந்ததால் அரவான் படத்திற்கு கிராமத்து பெண்ணின் சாயல் வருவதற்கும், மதுரை பேச்சும் சரியாக வராமல் கஷ்டப்பட்டேன்.
மேலும் போட்டின்னா தனக்கு ரொம்ப பிடிக்கும் என்று கூறும் தன்ஷிகா தான் நடிச்ச மூன்று படங்களிலேயே விதவிதமான கதாபாத்திரத்தில் நடிக்கும் நடிகை என்று பெயர் கிடைத்ததால் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்.
மேலும் எந்த வேடத்திலும் என்னால் சாதிக்க முடியும் என்றும் தெரிவித்துள்ளார்.

ஆடம்பரமாக நண்பர்களுடன் ஈஸ்டர் பண்டிகையை கொண்டாடிய நயன்தாரா


பிரபுதேவாவுடனான காதல் முறிவுக்குப் பின்பு நயன்தாரா மீண்டும் படங்களில் பிசியாக நடித்து வருகிறார்.
தற்போது தெலுங்கில் ராணாவுடன் ஒரு படத்திலும், கோபிசந்துடன் ஒரு படத்திலும் நடித்து வருகிறார்.
இந்த படங்களில் நடிப்பதற்காக ஐதராபாத்தில் உள்ள ஒரு 5 நட்சத்திர உணவுவிடுதியில் தங்கியிருக்கும் நயன்தாரா நேற்று தோழிகள் சிலருடன் சேர்ந்து ஈஸ்டர் பண்டிகையை கொண்டாடினார்.
ஏற்கனவே ஆன்மீகத்தில் அதிக ஈடுபாடு கொண்ட இவர் கிறிஸ்தவர் என்ற போதிலும் தீபாவளி, கிறிஸ்துமஸ் என அனைத்து பண்டிகைகளை கொண்டாடுவது வழக்கம்.
இந்நிலையில் நேற்று ஈஸ்டர் பண்டிகையை கோலாகலமாக கொண்டாட முடிவு செய்து, தான் தங்கியிருந்த உணவு விடுதிக்கு நண்பர்களை வரவழைத்து பல விதமான சாப்பாட்டை ஆர்டர் செய்து நண்பர்களுக்கு விருந்து கொடுத்தார்.
இதுகுறித்து நயன்தாரா கூறுகையில், முதல் முறையாக குடும்பத்துடன் இல்லாமல் தனியாக பண்டிகையை கொண்டாடுகிறேன்.
இது மனதுக்கு கஷ்டமாக இருந்தாலும், நண்பர்களுடன் ஈஸ்டர் கொண்டாடியது மகிழ்ச்சியாகவே இருக்கிறது என்றார்.

சூனில் திரைக்கு வரும் பில்லா 2


கொலிவுட்டில் ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் அஜீத்தின் ‘பில்லா 2’ திரைப்பட வெளியீடு தாமதமாகி வருகிறது.
தற்போது படப்பிடிப்புகள் முடிவடைந்துள்ள நிலையில், ரீ ரெக்கார்டிங், டப்பிங் என இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.
பில்லா 2 படத்தில் அஜீத்துக்கு ஜோடியாக பார்வதி ஓமனக்குட்டன் நடிக்கிறார்.
படத்தை இயக்குகிறார் சக்ரி டோலட்டி. இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.
இதற்கு முன்பு இப்படத்தை மே 25ஆம் திகதி வெளியிட படக்குழு முடிவு செய்திருந்தது.
தற்போது சூன் மாதத்தில் வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளனர்.
ஆனால் பாடல் வெளியீட்டை மட்டும் இம்மாதம் இறுதியில் வெளியிடப்போவதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

திவ்யபாரதியின் வாழ்க்கை படமாகிறது


மர்மமான முறையில் பால்கனியிலிருந்து விழுந்து மரணம் அடைந்த திவ்யபாரதியின் கதை படமாகிறது.
தமிழில் நிலாப் பெண்ணே என்ற படத்தில் அறிமுகமானவர் திவ்யபாரதி. தெலுங்கில் பொப்லிராஜா, ரவுடி அல்லுடு மற்றும் இந்தியில் தீவானா, பல்வான், கீத் உட்பட பல்வேறு படங்களில் நடித்தார்.
1990ம் ஆண்டு நடிகையாக அறிமுகமான இவர் 3 வருடங்கள் மட்டுமே நடித்தார். மும்பையில் 5 மாடி அடுக்கு குடியிருப்பில் வசித்து வந்த இவர், 1993ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 5ம் திகதி திடீரென்று பால்கனியிலிருந்து விழுந்து மரணம் அடைந்தார்.
இவர் தற்கொலை செய்துகொண்டாரா, மாடியிலிருந்து தள்ளிவிடப்பட்டு கொல்லப்பட்டாரா என்பது மர்மாகவே உள்ளது. சில்க் ஸ்மிதா வாழ்க்கை வரலாறை மையமாக வைத்து தி டர்ட்டி பிக்சர் படம் உருவானது.
அப்படம் வெற்றி பெற்றதையடுத்து தற்போது திவ்யபாரதி வாழ்க்கையை படமாக்க பாலிவுட் இயக்குனர் திட்டமிட்டுள்ளார். விக்ரம் சந்து தயாரித்து இயக்குகிறார்.
இதுபற்றி அவரிடம் கேட்டபோது, இளம்பெண் ஒருவர் ஒரே இரவில் பிரபல நடிகையாகிறார். சிறிய டவுனில் தொடங்கிய அவளது வாழ்வு பின்னர் எப்படி பிரபலமாகிறது.
திடீரென்று அவர் மரணம் அடைவது ஏன் என்பதை மையமாக வைத்து கதை அமைக்கப்பட்டுள்ளது. இது நிஜ சம்பத்தின் பின்னணியில் அமைந்த கதை போல் தெரிந்தாலும் மற்றவர்கள் குறிப்பிடுவது போல் குறிப்பிட்ட நடிகையின் வாழ்க்கையை தழுவி எடுக்கப்பட வில்லை. புதுமுக நடிகையே முக்கிய வேடத்தில் நடிக்க உள்ளார் என்றார்.
இந்த வேடத்துக்கு திவ்யபாரதி போல் முகத்தோற்றம் உள்ள ஒருவரை இயக்குனர் தேடி வருகிறார்.

லிங்குசாமி இயக்கத்தில் நடிக்க அசின் மறுப்பு

லிங்குசாமியின் இயக்கத்தில் இந்தியில் உருவாகவிருக்கும் வேட்டை படத்தில் நடிக்க அசின் மறுத்துவிட்டார்.
தமிழில் மாதவன், ஆர்யா நடிப்பில் லிங்குசாமி இயக்கி தயாரித்த படம் வேட்டை. இப்படத்தை இந்தியில் ரீமேக் செய்து இயக்க முடிவு செய்தார் லிங்குசாமி.
இதற்கான ஹீரோ, ஹீரோயின் தெரிவு நடத்திக் கொண்டிருக்கிறார். இரட்டை ஹீரோக்களில் ஒருவராக ஷாஹித் கபூர் நடிக்கிறார். மற்றொரு ஹீரோவாக மாதவனை(தமிழில் நடித்த அதே வேடம்) நடிக்க கேட்டபோது மறுத்துவிட்டார்.
தமிழில் அக்கா, தங்கை வேடங்களில் சமீரா ரெட்டி, அமலா பால் நடித்தனர். அந்த கதாபாத்திரங்களுக்கும் ஹீரோயின் தேடிக் கொண்டிருக்கிறார் இயக்குனர். இருநாயகிகளில் ஒருவராக நடிக்க அசினிடம் கேட்டுள்ளார். ஆனால் அவர் நடிக்க மறுத்துவிட்டார்.
இந்தியில் கான் நடிகர்களுடன் ஜோடியாக நடித்து வரும் அசின், ஸ்டார் அந்தஸ்து இல்லாத ஷாஹித் கபூர் போன்ற நடிகர்களுடன் நடிப்பதை தவிர்த்து வருகிறார்.
மேலும் ஹீரோவுக்கு சமமான வேடம் இருந்தால் மட்டுமே படங்களை ஒப்புக் கொள்கிறார். அத்துடன் இப்படத்தில் அக்கா, தங்கை என இருபாத்திரங்கள் இருப்பதால் நடிக்க தயக்கம் காட்டினார்.
சோலோ ஹீரோயினாக நடிக்கவே விரும்பும் அசின் இதில் மற்ற ஹீரோயினுக்கு அக்காவாகவோ, தங்கையாகவோ நடிக்க ஆர்வம் காட்டவில்லை என்று கூறப்படுகிறது.
இதற்கிடையே சோனாக்ஷி சின்ஹாவிடம் கேட்ட போது, அவரும் நடிக்க மறுத்து விட்டாராம். நடிகர், நடிகைகள் தெரிவில் தாமதம் ஏற்பட்டுள்ளதால் இந்தி வேட்டை படப்பிடிப்பு தொடங்குவதும் தாமதமாகி வருகிறது.

வியாழன், 5 ஏப்ரல், 2012

ஐஸ்வர்யாவை பார்த்து அதிர்ந்து போன தனுஷ்


3 படத்தின் சிறப்பு நிகழ்ச்சியில் பங்கேற்க திடீரென இயக்குனர் ஐஸ்வர்யா வந்ததை பார்த்ததும், தனுஷ் அதிர்ந்து போய் நிகழ்ச்சியில் பங்கேற்காமல் சென்றுள்ளார்.
கடந்த சில தினங்களுக்கு முன் ஒரு எப்.எம் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக குறிப்பிட்ட வானொலி நிலையத்துக்கு தனுஷ் சென்றுள்ளார்.
வரும் போதே ஸ்ருதியுடன் மட்டும் தான் வந்தாராம் தனுஷ். சிறிது நேரம் கழித்து இவர்களுடன் வந்து இணைந்திருக்கிறார் அனிருத்.
மூவரும் உட்கார்ந்து படத்தை பற்றி தொகுப்பாளருடன் பேசிக் கொண்டிருந்தார்கள். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வேண்டிய இயக்குனர் ஐஸ்வர்யாவுக்கு தகவலே சொல்லப்படவில்லை.
ஆனால் விஷயத்தை கேள்விப்பட்ட ஐஸ்வர்யா யாரும் அழைக்காமலே அங்கு வந்து நிற்க, முதலில் அதிர்ந்தவர் தனுஷ் தானாம்.
முகமெல்லாம் சிவந்து போனவர், இதோ ரெஸ்ட் ரூமுக்கு போயிட்டு வர்றேன் என கூறிவிட்டு எழுந்து போனவர் திரும்பி வரவே இல்லை.
அவர் திரும்பி வருவார் என்ற காத்திருந்த தொகுப்பாளருக்கும், மற்றவர்களுக்கும் ஏமாற்றம் தான் மிஞ்சியது.

கௌதம், அனிரூத், தனுஷ் இணையும் புதியக் கூட்டணி


தமிழ் திரையுலகினர் தற்போது சந்தித்துக் கொண்டால் '3' படம் எப்படி உள்ளது என்று தான் தங்களுக்குள் முதல் கேள்வியை கேட்டுக் கொள்கிறார்கள்.
தனுஷ், ஸ்ருதிஹாசன் நடித்து இருக்கும் '3' படத்திற்கு இரண்டு விதமான விமர்சனங்கள் மக்கள் மற்றும் திரையுலகினர் மத்தியிலிருந்து வர தொடங்கி இருக்கின்றன.
இன்னும் சில நாட்கள் சென்றால் படம் எப்படி  என்பதற்கான விடை கிடைக்கும். இந்நிலையில் கௌதம் மேனன், தனுஷ் இருவருமே தற்போது சந்தித்து பேசி இருக்கிறார்கள்.
கௌதம் மேனன் 'நீதானே என் பொன்வசந்தம்' படத்தினை இயக்கி வருகிறார் அதனை தொடர்ந்து விஜய்யை வைத்து 'யோஹன்' படத்தினை இயக்க இருக்கிறார். '3' படத்தினை தொடர்ந்து இந்தி படத்திலும், தமிழில் பரத்பாலா இயக்கத்தில் ஒரு படம் நடிக்க இருக்கிறார் தனுஷ்.
இந்நிலையில், இருவருமே தங்களது முந்தைய ஒப்புக் கொண்ட படங்களை முடித்துவிட்டு இணைந்து படம் பண்ண இருக்கிறார்கள். இப்படத்தின் தயாரிப்பாளர் யார், வேறு யார் எல்லாம் நடிக்கிறார்கள் என்பது இன்னும் முடிவாகவில்லை. இந்த படத்திற்கு  இசையமைப்பாளராக துளியும் சந்தேகமின்றி அனிருத்தை ஒப்பந்தமாக்கியுள்ளனர்.

முதன் முறையாக தமிழில் அமிதாப்


பாலிவுட் உலகின் சூப்பர் ஸ்டாரான அமிதாப் பச்சனை தமிழில் நடிக்க வைக்க பலரும் முயற்சி செய்தும், அது எதுவும் வெற்றி பெறவில்லை.
தமிழக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், உலகநாயகன் கமலஹாசன் ஆகியோர்களுடன் நெருங்கிய தொடர்பில் இருக்கும் அமிதாப், அவர்களுடைய படத்தில் கூட நடிக்கவில்லை.
தற்போது கூடிய விரைவில் ஒரு தமிழ் படத்தில் நடிக்க இருக்கிறார்.
காமராஜர் மற்றும் காந்தி வாழ்க்கையை படமாக்கிய பாலகிருஷ்ணன் அடுத்து இந்தியா- பாகிஸ்தான் பிரிவினையை மையப்படுத்தி புதுப்படம் ஒன்றை இயக்க உள்ளார்.
இதில் அமிதாப்பச்சனை நடிக்க வைக்க பேசி உள்ளாராம். அமிதாப்புக்கும் கதை பிடித்து போய் உள்ளதால், இப்படத்தில் நடிப்பார் என தகவல்கள் வெளியாகி உள்ளன.

நாயகனாக அறிமுகமாகும் இயக்குனர் சுப்ரமணிய சிவா


கொலிவுட்டின் பிரதான இயக்குனர் சுப்ரமணிய சிவா, புதியபடமொன்றில் நாயகனாக நடிக்க உள்ளார்.
கொலிவுட்டில் தனுஷின் திருடா திருடி, சீடன், ஜீவாவின் பொறி, அமீரின் யோகி போன்ற படங்களை சுப்ரமணிய சிவா இயக்கியுள்ளார்.
தற்போது இயக்கத்தை விட்டு நாயகனாக நடிப்பதற்கு முயற்சி செய்வதாக கொலிவுட்டில் தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ்நாட்டின் பிரபல இலக்கிய எழுத்தாளர் ஜெயமோகன் எழுதிய 'உலோகம்' நாவல் படமாக்கப்பட உள்ளது.
இதில் நாயகனாக இயக்குனர் சுப்ரமணிய சிவா நடிக்க உள்ளார். இதுகுறித்து அவர் ஊடகத்தினருக்கு அளித்த பேட்டியில் தெரிவித்ததாவது, உலோகம் என்ற புதியபடமொன்றில் நடிக்க உள்ளேன்.
ஆக்ஸன் படமாக உருவாக உள்ள உலோகத்திற்கு ஜெயமோகன் வசனம் எழுதுகிறார்.
தற்போது உலோகம் திரைப்படத்திற்கான படப்பிடிப்பு தயாராகி வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
இலக்கிய எழுத்தாளர் ஜெயமோகன், அங்காடித் தெரு, நான் கடவுள் போன்ற படங்களுக்கு திரைக்கதை, வசனம் எழுதியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

நித்யா மேனன் ஒதுக்கித்தள்ளிய கதாப்பாத்திரத்தில் த்ரிஷா


நித்யா மேனன் ஒதுக்கித்தள்ளிய கதாப்பாத்திரத்தில் த்ரிஷா நடிப்பதாக தெலுங்கு திரைப்பட உலகில் தகவல் வெளியாகியுள்ளது.
நூற்று எண்பது பட நாயகி நித்யா மேனன், கொலிவுட் படங்களில் நடிப்பதோடு மலையாளம் மற்றும் தெலுங்கு மொழிப்படங்களில் நடிக்க ஆர்வம் காட்டிவருகிறார்.
திரைப்பட உலகில் வேகமாக முன்னணி நாயகிகள் வரிசைக்கு விரைந்து முன்னேறும் நித்யா மேனன், சீனியர் முன்னணி நாயகர்களுடன் இணைந்து நடிக்க தயக்கம் காட்டி வருகிறார்.
சில தெலுங்கு பட நாயகர்களுடன் இணைந்து நடிக்க நித்யா, காரணங்களை அடுக்கிக்கூறி மறுத்துள்ளார் என்று படக்குழுவினர் கூறியுள்ளார்கள்.
தெலுங்கு பட இயக்குனர் பரசுராம் இயக்கத்தில் நாயகன் ரவி தேஜாவுடன் இணைந்து நடிக்க நித்யாவுக்கு வாய்ப்பு வந்துள்ளது.
ஆனால் படத்தின் நாயகி வேடம் பிடிக்காத காரணத்தால் நித்யா வாய்ப்பை கை கழுவினார்.
இதையடுத்து படக்குழுவினர் நாயகி த்ரிஷாவை நாட, அவர் நாயகி வேடத்தில் நடிக்க சம்மதம் தெரிவித்துள்ளார்.

தி டர்ட்டி பிக்சர்ஸ் தமிழ் ரீமேக்கில் நடிக்க மறுத்த அனுஷ்கா


இந்தி மொழியிலிருந்து தமிழில் எடுக்கப்படும் 'ரீமேக்' படத்தில் அனுஷ்கா நடிக்க மறுத்திருப்பதாக கொலிவுட்டில் தகவல் வெளியாகியுள்ளது. 
தென்னிந்திய நட்சத்திர நாயகி அனுஷ்கா, கொலிவுட்டில் இரண்டாம் உலகம் படத்தில் நடித்து வருகிறார்.
இப்படத்தை செல்வராகவன் இயக்குகிறார். ஆர்யா நாயகனாக நடிக்கிறார்.
இந்நிலையில் வித்யா பாலன் நடித்து பாலிவுட்டில் வெற்றிபெற்ற தி டர்ட்டி பிக்சர்ஸ் படத்தின் தமிழ் ரீமேக்கில் நடிக்க அனுஷ்காவை படக்குழுவினர் நாடியுள்ளனர்.
ஆனால் நாயகி அனுஷ்கா இந்த ரீமேக் படத்தில் நடிக்க மறுப்பு தெரிவித்துள்ளார்.
மேலும் கார்த்தி உடன் இணைந்து 'அலெக்ஸ் பாண்டியன்', இயக்குனர் விஜய் இயக்கத்தில் விக்ரமுடன் 'தாண்டவம்' ஆகிய படங்களில் அனுஷ்கா நடித்து வருகிறார்.
பாலிவுட் தி டர்ட்டி பிக்சர்ஸ் படம் சிறந்த திரைப்படத்திற்கான தேசிய விருது பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

யுவன் தயாரிப்பில் தல அஜித்


கொலிவுட் இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா புதிய படமொன்றை தயாரிக்க உள்ளார்.
திரையுலகில் முதன்முறையாக தல அஜித், யுவன் ஷங்கர் ராஜா தயாரிப்பில் இணைய உள்ளார்.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு, இயக்குனர் செல்வராகவன், ஒளிப்பதிவாளர் அரவிந்த் கிருஷ்ணா மற்றும் யுவன் ஷங்கர் ராஜா ஆகிய மூவரும் ஒயிட் எலிபேன்ட் என்ற திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கினார்கள்.
பின்னர் அவர்களின் நட்பில் விரிசல் விழ, அந்த நிறுவனம் சார்பாக ஒரு படம் கூட தயாரிக்காமல் பெயரளவிலேயே இருந்தது.
இதனிடையே மங்காத்தா வெற்றிக்கு பிறகு அஜீத் குமாருடன் மீண்டும் இணைய போவதாக இயக்குனர் வெங்கட் பிரபு அறிவித்தார். ஆனால் அந்த படத்தின் தயாரிப்பாளர் யார் என்பதை அவர் ரகசியமாக வைத்திருந்தார்.
இப்போது அந்தப் படத்தைத் தயாரிக்கப் போவது யுவன் ஷங்கர் ராஜாதான் என்று தெரிய வந்துள்ளது.
அஜீத் குமார், வெங்கட் பிரபு மீண்டும் இணைய போகும் படத்தை ஒய்ட் எலிபேன்ட் பேனரில் தயாரிப்பார்களா என்பது விரைவில் முடிவாகிவிடும்.

ஸ்ருதியை புகழ்ந்த கமல்


3 படத்தில் மகள் ஸ்ருதிஹாசனின் நடிப்பை பார்த்து வெகுவாக பாராட்டி இருக்கிறார் கமல்ஹாசன்.
ஐஸ்வர்யா தனுஷ் இயக்கத்தில், தனுஷ்- ஸ்ருதிஹாசன் நடிப்பில் உருவாகி இருக்கும் 3 படம், கடந்த 30ம் திகதி முதல் வெளியாகி, திரையில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டு இருக்கிறது.
ரசிகர்கள் மத்தியில் ஒரு பக்கம் நல்ல விமர்சனமும், மற்றொரு பக்கம் எதிர்பார்த்த அளவுக்கு படம் இல்லை என்றும் கூறப்பட்டு வருகிறது.
இந்நிலையில் இப்படத்தினை நடிகர் கமல்ஹாசனுக்கு பிரத்யேகமாக திரையிட்டு காட்டியுள்ளார் தனுஷ். படத்தை பார்த்துவிட்டு கமல்ஹாசன், தனது மகளை புகழ்ந்து தள்ளிவிட்டார்.
இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது, விஸ்வரூபம் படத்திற்காக நான் வெளிநாடு புறப்பட்டு செல்வதற்கு முன் இந்தபடத்தை தனுஷ் என்னிடம் போட்டு காண்பித்தார்.
படத்தில் ஸ்ருதியின் நடிப்பு அற்புதமாக இருந்தது. ‌எல்லோரும் ஸ்ருதியை அவரது தாய் சாயலில் இருப்பதாக சொல்வார்கள்.
ஆனால் இந்தபடத்தில் ஸ்ருதி உருவில், என்னை நானே பார்த்தேன். இதை ஒரு அப்பாவாக சொல்லவில்லை. ஒரு நடிகையாக இப்போது அவர் வந்திருக்கும் இடம் மகிழ்ச்சியளிக்கிறது என்று கூறியுள்ளார்.
மேலும் எந்த ஒரு பெண் இயக்குநரும் செய்திடாத புதிய முயற்சியை ஐஸ்வர்யா மேற்கொண்டுள்ளார். அவருக்கும் என் பாராட்டுகள் என்று கூறியுள்ளார்.