வியாழன், 15 டிசம்பர், 2011

ரஜினியின் உதவியோடு இயக்குநராகும் மானு


சிங்கப்பூர் தமிழ்பெண்ணாகிய மானு அடிப்படையில் ஒரு பரதநாட்டியக் கலைஞர்.
இவரை அஜித் ஜோடியாக 'காதல் மன்னன்' படத்தில் இயக்குநர் சரண் அறிமுகப்படுத்தினார். ஆனால் மானு தொடர்ந்து நடிக்க அவரது பெற்றோர்கள் அனுமதிக்கவில்லை.
இதனால் தொடர்ந்து உலகம் முழுவதும் பரதநாட்டிய நிகழ்சிகள் நடத்தி வந்தார். இதற்கிடையில் மலேசியா மற்றும் சிங்கப்பூரில் உருவாகும் சீரியஸ் படங்களின் நல்லெண்ணத் தூதுவராக செயல்பட்டு வருகிறார்.
சிங்கப்பூரின் முதல் தமிழ்ப் படமான, 'சிங்கையில் ஒரு குருஷேத்ரம்' படத்தை தமிழ் நாட்டில் வெளியிட முக்கிய காரணமாக இருந்தார்.
மானு மீதான நட்புக்காக இயக்குநர் சரண், வைரமுத்து இருவரும் இந்தப் பட வெளியீட்டுக்கு உறுதுணையாக இருந்தார்கள். இந்நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினி சிங்கப்பூர் மவுண்ட் எலிசபெத் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றபோது மருத்துவமனை நிர்வாகத்துக்கும், ரஜினி குடும்பத்துக்கும் பாலமாகவும் உறுதுணையாகவும் செயல்பட்டார்.
இந்தநேரத்தில் ரஜினி மானுவின் அன்பில் நெகிழ்ந்து போனாராம். கடந்த மாதம் சென்னை வந்த மானுவுக்காக சிங்கப்பூர் நாடகக்கலைஞர்கள் பங்கேற்று நடித்த நாடகத்தை கண்டு களித்து பாராட்டினார் ரஜினி.
இந்த சமயத்தில் மானுவை வீட்டுக்கு அழைத்த ரஜினிக்கு ஒரு டாக்குமென்ட் டிராமா படத்தை டிவிடி மூலம் போட்டுக் காட்டியிருக்கிறார் மானு, 'எழுதாத கதை' என்று தலைப்பு வைக்கப்பட்டிருந்த அந்தப் படத்தில் மானுவும், ஒரு குழந்தை நட்சத்திரமும் நடித்திருந்ததைப் பார்த்து ஆச்சர்யப்பட்டதோடு கண் கலங்கினாராம்.
அது ஈழத்தில் நிராதரவான ஒரு இளம் தாய், மகளின் துயரத்தை சொல்லும் கதையாம். படத்தைப் பார்த்து ரஜினி பாராட்டியதோடு இல்லாமல் தாராளமாக நீங்கள் ஒரு படத்தை இயக்கலாம் என்று ரஜினி நம்பிக்கை கொடுக்க, அஜித் நாயகியான மானு தற்போது ஒரு முழுநீள தமிழ்ப் படத்தை இயக்க தயாராகி விட்டார் என்கிறார்கள்.
இதுவும் ஈழப்பெண்களின் அவலம் கூறும் கதையாக இருக்கும் என்கிறார்கள் மானு தரப்பில்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக